அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும்.
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
அதிகாரம் 33
Not killing. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும்.
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்பின்சாரப் பொய்யாமை நன்று.
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்கொல்லாமை சூழும் நெறி.
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்கொல்லாமை சூழ்வான் தலை.
வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்செல்லாது உயிருண்ணுங் கூற்று.
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிதுஇன்னுயிர் நீக்கும் வினை.
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்கொன்றாகும் ஆக்கங் கடை.
கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்புன்மை தெரிவா ரகத்து.
கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.