யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன்.
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
அதிகாரம் 35
Renunciation. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன்.
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்ஈண்டுஇயற் பால பல.
துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து.
தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்உற்றார்க்கு உடம்பும் மிகை.
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ.
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்குஉயர்ந்த உலகம் புகும்.
உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர் க்கு.
யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கிவலைப்பட்டார் மற்றை யவர்.
முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றுநிலையாமை காணப் படும்.
இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு.
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.