கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்உரைக்கல் உறுவதொன் றுண்டு.
நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.
அதிகாரம் 128
The Reading of the Signs. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்உரைக்கல் உறுவதொன் றுண்டு.
நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்பெண்நிறைந்த நீர்மை பெரிது.
கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தைஅணியில் திகழ்வதொன்று உண்டு.
( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதைநகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றிஅன்பின்மை சூழ்வ துடைத்து.
பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்முன்னம் உணர்ந்த வளை.
குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னமே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்எழுநாளேம் மேனி பசந்து.
எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கிஅஃதாண் டவள்செய் தது.
தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்காமநோய் சொல்லி இரவு.
கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.